×

‘லத்தியால் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள்’ - பிரதீப் ரங்கநாதன் பதிவு..!

 

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், நேற்று முன்தினம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், "லத்தியால் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள்”என்று பதிவிட்டு, மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Don’t answer questions with lathis.#Neet

— Pradeep Ranganathan (@pradeeponelife) July 22, 2026