×

உதயநிதி ஸ்டாலினுக்கு கொரோனாவா?- சுகாதாரத்துறை விளக்கம் 

 

உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் மட்டுமே, கொரோனா இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும்  பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது,  துறைசார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சிகளில் பங்கேற்பது என நாள்தோறும் பிஸியாக இருந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட மதுரையில் நடைபெற்ற திமுக  பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். இதையடுத்து அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் , அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், உதயநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், உதயநிதிக்கு காய்ச்சல் தவிர எந்த பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 215 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் 135 பேரும், செங்கல்பட்டில் 24 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.