குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்களாகியும் விவசாயிகளுக்கு வழங்கப்படாதது ஏன்?- உதயநிதி
குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது - விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன். வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த Inefficient அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா? எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.