“லேப்டாப்பை யூடியூப் பார்க்க, கேம் விளையாட பயன்படுத்தக்கூடாது”- உதயநிதி ஸ்டாலின்
யூடியூப் பார்ப்பதற்கும்,படம் பார்ப்பதற்கும்,கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் கல்விக்காகவும்,வேலை வாய்ப்புக்காகவும் லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகள் 898 பேருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார். பின்னர் மேடையில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஆட்சியாளர்கள் பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்கள்.ஆனால் 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் லேப்டாப் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதை விட கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தால் படிப்புக்கும் உதவியாக இருக்கும். வேலைக்கும் உதவியாக இருக்கும் பெரிய இடங்களில் வேலை கிடைக்கும் என்பதால் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் படிக்க வேண்டும் பெண்களுக்கு கல்வி முக்கியம், பெண்களின் கல்விக்காக கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. யூடியூப் பார்ப்பதற்கும்,படம் பார்ப்பதற்கும்,கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும்,வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும்” என்றார்.