அடுத்தமுறை தமிழ்நாட்டுக்கு அமித்ஷா வரும்போது அதிமுக இரண்டாக பிரியும்- ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு
ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அடுத்த முறை தமிழகம் வரும்போது அதிமுக இரு அணிகளாக பிரியும் என சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்.
சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் , திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவை அழித்த நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. 1957 ஆம் ஆண்டு முதல் , ஒரே சின்னத்தில் போட்டியிட்ட ஒரே கட்சி திமுக தான். ஆனால், திமுகவின் வரலாறு தெரியாமல் சிலர் பேசுகிறார்கள்.
கடந்த மக்களவை தேர்தலில், பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்தார். திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதே போல், தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து செல்கிறார். தமிழகத்துக்கு அமித்ஷா முதல் முறை வந்த போது, பாமகவில் மோதல் வெடித்தது. அப்பா- மகன் இடையே பிரிவு வந்தது. மதுரைக்கு 2 ஆவது முறை அமித்ஷா வந்த போது, ரூ 200 கோடி காணாமல் போனது. அடுத்தமுறை அமித்ஷா வரும்போது அதிமுக கட்சி இபிஎஸ் அணி, வேலுமணி அணி என இரண்டாக பிரியும், ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட மீனவர் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்று கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க போகிறது , அதனால் தான் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா காலடியில் கிடக்கிறார். சம்பந்தி வீட்டில் ரெய்டு என்றதும் கட்சியை அடகு வைத்தார். ஓரணியில் தமிழ்நாடு என்றதும், எடப்பாடிக்கு நடுக்கம் வந்து விட்டது. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மூலம் 10 நாளில் ஒரு கோடி பேரை உறுப்பினராக சேர்த்த ஒரே இயக்கம் திமுக தான்” என்றார்.