அதிமுக கூட்டணிக்கு மக்கள் தகுந்த பதிலடி தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
கோவை பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
கோவையில் பரப்புரையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கோவை மக்கள் தந்துள்ளீர்கள். இந்தத் தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை தர வேண்டும். பீகார் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என பிரதமர் மோடி அங்கே தேர்தல் பரப்புரையில் பேசினார். தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் பேசினார். நாம் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அங்கேயே மன்னிப்பு கேட்டார். ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை பாஜகவினர் எப்படியெல்லாம் விளம்பரங்கள் மூலம் இழிவு செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பூரி ஜெகநாதர் கோயில் கருவூலச் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது, என தமிழர்களை திருடர்களாக சித்தரித்தார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகாவில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என மத்திய அமைச்சர் சோபா பேசி, பிறகு பிரச்னை ஆனதும் மன்னிப்பு கேட்டார். மக்கள் தொகை போதாது என கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை நிராகரித்துவிட்டு, உ.பி.யின் ஆக்ரா நகரில் ஆளில்லாமல் மெட்ரோவை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கலவரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என செயல்படும் கட்சிக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுக்க வேண்டும்” என்றார்.