தரமணி கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றவாளிகள் உடனடி கைது- கனிமொழி
தரமணி கொலை வழக்கில் காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரித்துவருவதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் கொண்ட கும்பல், அதைத் தடுக்க வந்த அவரது கணவர், 2 வயது குழந்தை ஆகியோரை படுகொலை செய்ததுடன், இளம்பெண்ணையும் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது.
இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “சென்னை தரமணி பகுதியில் வடமாநில இளைஞரையும் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் சமூகவிரோதிகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது. கொலை செய்யப்பட்ட அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரித்துவருகின்றனர். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.