×

சென்னையில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்!!

 

சென்னையில்  48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக  கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும்,  மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதனால்  மழையையும் பொருட்படுத்தாமல் வானவேடிக்கைகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே தீபாவளி பட்டாசுகளால் உருவான குப்பையை 24 மணிநேரத்தில் அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் ஏற்கனவே உள்ள வாகனங்களுடன் சேர்த்து கூடுதலாக 33 வாகனங்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டன.  இன்று காலை வரை சென்னை மாநகராட்சி பகுதியில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகற்றப்பட்ட பட்டாசு கழிவுகள் அனைத்தும் உடனடியாக கும்மிடிப்பூண்டி, சிப்காட் தொற்சாலை வளாகத்தில் உள்ள அபாயகரமான கழிவுகள் மேலாண்மை மையத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு 87 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.