×

தேமுதிகவில் வெடித்த அதிருப்தி: "கூட்டணியைச் சொல்லாமல் அப்ளிகேஷன் எதற்கு?" - நிர்வாகிகள் கேள்வி..!

 

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பான அறிவிப்பை கடலூரில் ஜனவரி 9-ந்தேதி நடைபெற்ற மாநாட்டில் சொல்வதாக முதலில் கூறினார். ஆனால், அப்போது அறிவிக்கவில்லை. அதன்பிறகு, பிப்ரவரி 3-ந்தேதி நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிப்பதாக தெரிவித்தார். அப்போதும் எதையும் சொல்லவில்லை.

இந்த நிலையில், தே.மு.தி.க. சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 6-ந்தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

தமிழகத்தில் பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், புதுச்சேரியில் பொதுத் தொகுதியில் போட்டியிட ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கி 4 நாட்கள் ஆன நிலையிலும், நிர்வாகிகள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இன்று காலை முதல் தே.மு.தி.க. அலுவலகம் காற்று வாங்கியது. விருப்ப மனு கொடுக்க நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். அதை வாங்க யாரும் வரவில்லை. இதனால், கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
"யாருடன் கூட்டணி என்பதே தெரியாத நிலையில், எப்படி விருப்ப மனுவை வாங்க முடியும்" என்று நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.