“முதலமைச்சரை பிடித்த சனியன் ஒழிந்தது”- திண்டுக்கல் லியோனி பரபரப்பு பேச்சு
ஆளுநர் மாற்றம் காரணமாக முதலமைச்சரை பிடித்த சனியன் ஒழிந்தது, தமிழ்நாட்டைக் கண்டு மோடி அச்சம் கொண்டுள்ளார் என திண்டுக்கல் லியோனி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளரான திண்டுக்கல் லியோனி முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆளுநர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த லியோனி, ஆளுநர் மாற்றம் 2 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற வேண்டியது எனவும், தமிழ்நாட்டில் தேர்தல் நிம்மதியாக நடக்கும் என்றும், திமுக தலைவரை பிடித்த சனியன் ஒழிந்தது என கூறினார். ஆளுநரை சனியன் எனக் கூறக்கூடாது என்றும், தமிழர்களுக்கு இழைத்த அநீதி கொடுமைகளுக்காக அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன் எனவும், சனி தொலைந்தது, ஞாயிறு முளைத்தது என பதில் அளித்தார். ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்ந்ததால் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார் எனவும், தமிழ்நாட்டைக் கண்டு மோடி அச்சம் கொண்டுள்ளார் என்றும் திண்டுக்கல் லியோனி தெரிவித்தார். மேக் இன் இந்தியா என கூறும் மோடி, மேலும் இதுவரையில் எந்த திட்டத்தையும் உலகளவில் கொண்டு சேர்க்கவில்லை என்றும், மேக் இன் தமிழ்நாடு என 2030இல் திட்டத்தை அறிவித்துள்ள முதலமைச்சர், 1 டிரில்லியன் பொருளாதாரத்தை இலக்காக கொண்டு செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். அனைவரையும் அர்ச்சகர் விருத்த பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சரை விபூதி பூசாத தர்மகர்த்தா என பட்டம் கொடுத்து அழைப்பதாக கூறினார்.