×

கள்ளச்சாராய விவகாரம் - காவல் ஆய்வாளர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி நடவடிக்கை

 

இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் என்ற கிராமத்தில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த 16 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக 16 பேரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துமனைகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எக்கியார் குப்பம் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.