பர்வதமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இனி காலை 5 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதி..!
Feb 8, 2026, 07:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை அமைந்துள்ளது. இங்குள்ள புகழ் பெற்ற மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலுக்கு பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை காரணமாக பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டது.
இதை தீர்க்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பக்தர்கள் பாதுகாப்பு, ஒழுங்கான தரிசனம் மற்றும் மலையில் இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
- அதன்படி தினமும் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் பர்வதமலை மீது ஏற அனுமதி வழங்கப்படும். பிற்பகலில் மலையில் இருள் சூழ்ந்து மிக ஆபத்தான விதமாக மாறுவதால், இது போன்ற நேரக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 100 பேர் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்டுப்பாடு கூட்ட நெரிசலை தவிர்த்து அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.
- மேலும் 18 வயது முதல் 60 வயது வரை உடல் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும். குழந்தைகள், முதியோர் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மலையேறுவதில் ஆபத்து ஏற்படலாம் என்பதால் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- பக்தர்கள் மலை ஏறும் போது அடையாள அட்டை காட்ட வேண்டும்.
- திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 200 பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு நேரடியாக அனுமதி அளிக்கப்படும்.
- இதர மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் தினமும் 800 பேர் வரை இணைய வழியில் முன்பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யும் போது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் தேவைப்படும்.
- பக்தர்கள் முன்பதிவு செய்து மலையேறும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்காக அடிப்படை முகாம்களும் அமைக்கப்படும்.
இந்த விதிமுறைகளை பக்தர்கள் அனைவரும் கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கேட்டுக் கொண்டார்.
"பக்தர்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை" என, அவர் வலியுறுத்தினார்.