தேவநாதன் ஜாமின்மனு 2-வது முறையாக தள்ளுபடி
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்-வின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி தேவநாதன் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி என்.வெங்கடவரதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பாபு, தினமும் புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும், விசாரணை இன்னும் நிறைவடையததால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், ஜாமீனில் வெளிவந்தால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். காவல்துறை வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுக்களை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.