டெல்லி கார் குண்டுவெடிப்பு - தவெக தலைவர் இரங்கல்..!
டெல்லியில் பாதுகாப்பு பலமாக உள்ள பகுதிகளில் ஒன்று செங்கோட்டை. இந்தப் பகுதிக்கு உள்ளூர் மக்கள், சுற்றுலா வாசிகள் உட்பட பலர் வந்து செல்வது வழக்கம். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி இது. இந்தச் சூழலில் இன்று (நவ.10) மாலை 6.30 மணி அளவில் அந்த மெட்ரோ ரயில் நிலையத்தின் ‘கேட் 1’ நுழைவாயில் பகுதியில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது வெடிச் சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் அங்காடிகளும் அதிகம் நிறைந்துள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறைக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் அந்தப் பகுதியில் தீயை அணைத்தனர். காவல் துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சாலையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை தீப்பிடித்து எரிந்தன. டெல்லி கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.