“சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும்”- சென்னை காவல் ஆணையரகத்திற்கு பறந்த பரபரப்பு புகார்
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு பேசும் மக்களை சீமான் அவதூறாக பேசிவிட்டதாக கூறி கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் கடிதம் அளித்துள்ளனர். அந்த கடிதத்தில், “கடந்த 28.04.2025 அன்று, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற நபர் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் (User Name @ _S_a_n_t_h_o_s_h_s) ஸ்டோரிக்கள் பதிவிட்டுள்ளார். அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதத்தில், 'சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், விரைவில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும். நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு இரங்கல் செய்தி அதிவிரைவில் வரும், அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள். தெலுங்கு பேசும் பேசும் மக்களை தவறாக பொதுத்தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கே. அதன் விளைவு மரணம்' என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மற்றொரு ஸ்டாரியில் பட்டா கத்திகளின் படங்களை பதிவிட்டு ‘kooptu Vaa daa antha the****ya paiyana... விரைவில் சம்பவம்' என்று பதிவிட்டு 4 இஸ்டாகிரம் கணக்குகளை டேக் செய்துள்ளார். (@killar_boy_logu, @dr_muthuram_tn_60, @_itz_me_leo_das_143, @ft.sanjay_7).
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட 2010 வது ஆண்டு தொடங்கி இன்றுவரை எந்த இடத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெலுங்கு மக்கள் குறித்தோ மற்ற எந்த தேசிய இன மக்கள் குறித்தோ இழிவாகவோ, அவதூறாகவோ பேசியது கிடையாது. மாறாக நாம் தமிழர் கட்சியில் தெலுங்கு இன மக்கள் உட்பட பல தேசிய தேசிய இன மக்கள் உறுப்பினர்களாகவும், பல முக்கிய பொறுப்பாளராகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களாகவும் இருக்கிறார்கள். தெலுங்கு இன மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இழிவாக பேசி வருவதாகவும், அதை நிறுத்தாவிட்டால் அவரது தலை துண்டாக்கப்படும் என்றும் கொலை மிரட்டல் விடுத்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பதிவிட்டுள்ள மேற்படி சந்தோஷ் என்கிற நபர் மீதும், அவர் டேக் செய்து பதிவிட்டுள்ள மேற்படி 4 பேர்கள் மீதும், அவர்கள் சார்ந்துள்ள இயக்கம் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தங்களை இதன் மூலம் கேட்டுகொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.