×

“ஜெ., காலில் பாஜகவினர் விழுந்த நிலை மாறி, பாஜக காலில் அதிமுகவினர் விழும் நிலை”

 

ஜெயலலிதா காலில் பாஜகவினர் விழுந்து கொண்டு இருந்த நிலை மாறி  பாஜக காலில் அதிமுகவினர் விழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் விமர்சித்துள்ளார். 

சென்னை பிராட்வே ஆசீர்வாதபுரத்தில் நவீன வசதியுடன் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு மைதானத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இளைஞர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சென்னை வ.உ.சி சாலையில் நவீன முறையில் புதியதாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை  அமைச்சர் சேகர்பாபுவும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “சென்னை துறமுகம் தொகுதி ஆசீர்வாதபுரம்  பகுதியில் சுமார் ரூ.1 கோடியே 89 லட்சத்தில் உருவாக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தையும் உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்துள்ளோம். இது இந்த பகுதி இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவினர் பாஜக அலுவலகத்தில் காத்துக்கிடக்கின்றனர். கொள்ளைப்புற வாசல் வழியாக பாஜக தமிழகத்தை ஆட்டி படைக்கலாம் என்று இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு இங்கே நடந்து கொண்டிருக்கும் சதுரங்க ஆட்டத்தில் முழுக்க முழுக்க பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஜெயலலிதா காலில் பாஜகவினர் விழுந்து கொண்டு இருந்த நிலை மாறி, பாஜக காலில் அதிமுகவினர் விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லக்கூடிய  அதிமுக. நோட்டாவிற்கு போட்டியிடுகின்ற பாஜக அலுவலகத்தில் காத்துக்கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் ஏக் நாத் சிண்டேவாக சி.வி.சண்முகம் இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும்” என்றார்.