ஓயாமல் திட்டிக் கொண்டே இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள்
நெல்லை மானூர் அருகே ஓயாமல் திட்டிக் கொண்டே இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேல தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 95). இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90). இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையில் அருணாச்சலமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளார். மகன் பழனியும் இறந்திருக்கக்கூடிய நிலை இருக்கிறது. இதனால் வெள்ளையம்மாள் தனது மகன் பழனியின் மனைவி வசந்தா (வயது 60) என்ற குடும்பத்தோடு பேரக் குழந்தைகளோடு வாழ்ந்து வந்திருக்கிறார்.
வெள்ளையம்மாள் அடிக்கடி தனது மருமகள் வசந்தா, வேலை செய்யாமல் இருந்தால் திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டையும் நடைபெற்று வந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த வசந்தா, நேற்று அதிகாலை ஆத்திரத்தில் தனது மாமியார் வெள்ளையம்மாளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். உடலை வீட்டின் பின்பக்கம் இருந்த மாட்டு தொழுவத்தில் போட்டுவிட்டு தனக்கு எதுவும் தெரியாதது போல வீட்டிற்குள் சென்று தூங்கி இருக்கிறார். இதனால் நேற்று காலையில் பால் கறக்க வந்த பால்காரர் வெள்ளையம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வசந்தாவிடம் கூறியிருக்கிறார். உடனே தனக்கு எதுவும் தெரியாதது போல வசந்தாவும் அலறி துடித்து அங்கே சென்று பார்த்து கண்ணீர் விட்டு அழுது நாடகம் ஆடி உள்ளார். இது குறித்து மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் மானூர் காவல்துறையின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வசந்தா முன்னுக்கு பின்னான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து நேற்று காலையிலிருந்து இரவு வரை விசாரணை நடத்தினர். எனக்குத் தெரியவே தெரியாது என்று வசந்தம் கூறி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இனிமேல் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட வசந்தா, தன்னை மாமியார் வெள்ளையம்மாள் அடிக்கடி திட்டியதாலும், தொந்தரவு செய்ததாலும் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் மானூர் காவல்துறையினர் வசந்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.