×

நடுரோட்டில் கடிக்கும் ஆபத்தான தெருநாய்கள்... இனி கேரளாவில் என்ன நடக்கும் தெரியுமா?

 

தெருநாய்கள் தொடர்பான மேலாண்மை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகளைத் தொடர்ந்து கேரள அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெருநாய்களை ஒட்டுமொத்தமாக கொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை. ரேபிஸ் பாதித்த, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட அல்லது தெளிவாக ஆபத்தை ஏற்படுத்தும் நாய்களுக்கு, சட்ட மற்றும் கால்நடை மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற முக்கியமான இடங்களில் இருந்து தெருநாய்களை விலக்கி வைக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கேரளத்தின் புதிய நடைமுறை, விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள், 2023 (Animal Birth Control Rules, 2023) அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த விதிகள் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டம், 1960 (Prevention of Cruelty to Animals Act, 1960)-ன் கீழ் உருவாக்கப்பட்டவை.

மேலும்,கேரளம் நகராட்சி சட்டம், 1994-ன் பிரிவு 438 மற்றும் 2026 மே 19 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளும் கேரளத்தின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குணப்படுத்த முடியாத நோய், உயிருக்கு ஆபத்தான காயம், ரேபிஸ் பாதிப்பு அல்லது நிரூபிக்கப்பட்ட வகையில் வன்முறையாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் நாய்களுக்கு மட்டுமே கருணைக்கொலை (euthanasia) பரிசீலிக்கப்படும்.

பொதுமக்கள் அளிக்கும் புகார் மட்டுமே போதுமானதாக இருக்காது. உள்ளூர் தெருநாய் மேலாண்மைக் குழு (Stray Dog Management Committee) எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்ய வேண்டும்.

அனுமதி வழங்கப்பட்டால், கருணைக்கொலை நடவடிக்கை தகுதி பெற்ற கால்நடை மருத்துவரால் மனிதாபிமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். விஷம் கொடுப்பது உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத முறைகள் அனுமதிக்கப்படாது.

கருணைக்கொலைக்காக அடையாளம் காணப்பட்ட நாய்கள் முதலில் 2 முதல் 3 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட மையம் அல்லது பொருத்தமான காப்பகத்தில் வைக்கப்படும். இந்த காலகட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட விலங்கு நல அமைப்புகள் அல்லது தனிநபர்கள் அந்த நாய்களைப் பராமரிக்க முன்வரலாம்.

எனவே, கேரளத்தின் கொள்கை தெருநாய்களை ஒட்டுமொத்தமாக கொல்லும் உத்தரவு அல்ல. பொதுமக்களுக்கு உண்மையான ஆபத்தை ஏற்படுத்தும் நாய்களை கையாள ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறையை இது வகுக்கிறது. அதே நேரத்தில், தடுப்பூசி, கருத்தடை மற்றும் விலங்கு நலன் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.