ஆவணமின்றி ஆம்னி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பணம் பறிமுதல்
Apr 24, 2025, 11:50 IST
கடலூரில் ஆவணமின்றி ஆம்னி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தை நிறுத்திய போலீசார் அதில் பயணித்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பயணி ஒருவர் 40 லட்சம் ரூபாய் பணத்தை எந்தவித ஆவணமும் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பணம் ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத பணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.