"அதிமுக- திமுக இணைந்து ஆட்சி அமைக்க 100% முயற்சி செய்தார்கள்"- நிர்மல்குமார்
சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்கள் தலைவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஆறு நாட்களில் தொடர்ந்து ஆக்கபூர்வமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறோம். மக்கள் என்ன எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அது நூறு சதவீதம் நிறைவேற்றப்படும்.பழைய திட்டங்கள் தொடரும். மாவட்டத்தை பொறுத்த அளவில் மாநகராட்சி முழுவதும் கழிவுநீர் கால்வாய் இல்லை. நிதி ஆலோசனைக்கு பிறகு அதை ஆராய்ந்த பிறகு தான் அறிவிக்க முடியும். 140 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள். பெரும்பான்மையை நிரூபித்து விட்டோம். ஒட்டுமொத்த மக்கள் அளித்த தீர்ப்பு இந்த ஆட்சிக்கு எதுவும் ஆகாது. கடந்த ஆட்சியில் 400 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. நிறைய விசாரிக்கப்படாமல் உள்ளது, அது விசாரிக்கப்படும். அடுத்த நிதி நிலைக்குப் பிறகு இது குறித்து பார்ப்போம். மதுக்கடைகள் மூட படிப்படியாக முயற்சிகள் எடுக்கப்படும். குட்கா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது, நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நீட் தேர்வை கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக மாறி இருக்கிறது. நீட் வேண்டாம் என்பது தான் எங்களின் நோக்கம். நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை. இது தேவையற்ற ஒன்று, ஆனால் இதை நடத்துவதையாவது முறையாக நடத்த வேண்டும். டாஸ்மார்க் நேரத்தை குறைப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். அதிமுக பிரச்சனை அவர்களின் உட்கட்சி விவகாரம் அதுவரைக்கும் நாங்கள் பேச முடியாது. அது குறித்து அவர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். எடப்பாடி அவர்களும் ஸ்டாலின் அவர்களும் சில தொழிலதிபர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்துள்ளார்கள். எம்ஜிஆர் எதற்கு கட்சி ஆரம்பித்தார்? அதற்கு எதிராக எடப்பாடி செயல்பட்டதால் கட்சியில் நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் ஆதரவை ஏற்று அவர்கள் கட்சியில் இருக்கும் சிலர் எங்களுக்கு ஆதரித்துள்ளார்கள்.
அதிமுக, திமுக இணைந்து ஆட்சி அமைக்க 100 சதவீதம் முயற்சித்தார்கள். ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆதரவாளர்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் மக்களுக்கு எதிராக போக வேண்டாம் என சில முக்கிய தலைவர்கள் கூறியதால் மாறி உள்ளது. யாருக்கு எந்த இலாக்கா என விரைவில் முதல்வர் அறிவிப்பார். சந்திக்க வேண்டும் என விருப்பப்பட்டவர்களை முதல்வர் சந்தித்திருக்கிறார்” என்றார்.