“இபிஎஸ்க்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் பாஜகவுடன் அதிமுகவை இணைத்துவிடுவார்”- நிர்மல்குமார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், அதிமுகவை பாஜகவுடன் இணைக்கக்கூட தயங்க மாட்டார் என அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “கடந்த ஆட்சியில் கோயில் தங்கம் டெபாசிட் செய்யும் முறை அவசர கதியில் நடந்ததாக பல புகார்கள் வந்துள்ளன. மேலும் கோயில்களின் நிதியை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. முறைகேடுகள் நடந்திருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடும் முடிவை அரசு எடுக்கவில்லை. திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு.ஸ்மார்ட் மீட்டர் தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் குறித்த நேரத்தில் நடத்தப்படும். கும்பாபிஷேகத்தில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மதுரையில் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்தோர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையை சீராக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலை மீது ஏற்கனவே உள்ள நடைமுறையின் படியே தீபம் ஏற்றப்படும். இதில் யாரும், எந்த மதவாத சக்தியும் உள்ளே நுழைந்து அரசியல் செய்ய நாங்கள் 100% விட மாட்டோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், அதிமுகவை பாஜகவுடன் இணைக்கக்கூட தயங்க மாட்டார்.
யாரைப் பார்த்தும் பயமில்லை. மிரட்டிய திமுகவைப் பார்த்தே எங்கள் முதல்வர் பயப்படவில்லை. 7-8 வருடங்களாக ஒரு சிலர் தங்களது சொந்த இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக செய்தியாளர்களை சந்தித்து வந்தனர். செய்தியாளர் சந்திப்பு என்பது mainstream மீடியா வந்த பிறகுதானே. print media காலத்தில் பிரஸ் ரிலீஸ்தான் போகும். மக்களை எங்கள் முதல்வர் தொடர்ந்து சந்திக்கிறார். செய்தியாளர்களை சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை. முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று Benchmark Fix செய்யாதீர்கள்” என்றார்.