முதல்வர் விஜய்யின் புகைப்படம் வாங்கியதில் ஊழல்..!!
கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதலமைச்சர் விஜயின் புகைப்படங்களை ரூ.800க்கு வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், அந்தந்த பகுதிகளில் அதிகாரிகளை நியமித்து புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது. மேலும், புகைப்படங்கள் வாங்கப்பட்டதற்கான செலவு குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பால்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக ராகவ் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றதில் இருந்தே, கூட்டுறவில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாத அலுவலர்களையும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களையும் மிரட்டி மாதந்தோறும் கமிஷன் பெற்று வருகிறார்.
தற்போது ஒவ்வொரு கூட்டுறவு கடைகளிலும் தமிழ்நாடு முதல்வர் விஜய் புகைப்படம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துக்கு சந்தை மதிப்பை விட கூடுதலாக தொகையை குறிப்பிட்டு முறைகேடுகளை செய்து வருகிறார். இந்த ஊழல் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் விசாரணை நடத்தக் கோரி மனு அளித்தேன். அந்த மனுவை நாங்கள் புகார் கொடுத்த அதிகாரியின் கீழ் பணியாற்றும் அதிகாரி விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு உயரதிகாரி மீது குற்றச்சாட்டுகளை வைத்தால், அவருக்கு கீழ் பணி புரியும் ஒரு அலுவலரை விசாரணை செய்ய உத்தரவிட்டால், அந்த விசாரணை எவ்வாறு முறையாக இருக்கும்? எனவே, கூட்டுறவுத்துறை செயலர் அல்லது கூட்டுறவு சங்கத்தின் தலைமை பதிவாளர் தலைமையில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.