×

"கொரோனா பரவலுக்கு 5ஜி டவர் தான் காரணம்" - திடுக் தகவல்!

 

நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜசேகர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "பல நாடுகளில் 2019ஆம் ஆண்டு முதலே 5ஜி சேவைக்கான பரிசோதனைகள் நடந்து வருகிறது. 5ஜி அலைக்கற்றை டவர் இல்லாத பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்த 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி சேவைகளால் தான் உலகில் சுற்றுச்சூழல் மாறுபாடு அதிகரித்தது. 

மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டன. 5ஜி அலைகற்றையால் தான் கொரோனா பரவல் ஏற்படுகிறது. எனவே, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறும், உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "மனுதாரரின் ஆய்வு மிகப் பெரியது, நீதிபதிகள் இதுபோன்ற ஆய்வுகள் குறித்த நிபுணர்கள் இல்லை. எனவே, இதுபோன்ற ஆய்வு குறித்து ICMR, IIT போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அனுமதி அளித்துள்ளதா?” என கேள்வி எழுப்பினர். மேலும் இதுபோன்ற வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்க முடியாது என தெரிவித்தனர். இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஏற்கெனவே தொலைத்தொடர்பு துறை (DoT) இது வதந்தி; ஆதாரமற்ற இந்தச் செய்தியை நம்ப வேண்டாம்; 5ஜி அலைக்கற்றைக்கும் கொரோனாவுக்கும் எவ்வித தொடர்புமில்லை என விளக்கமளித்துள்ளது கவனிக்கத்தக்கது.