அரசு அலுவலருக்கு கொரோனா உறுதி; உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகமும் மூடல்!
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாகத் தலைமைச் செயலகம் தொடங்கி தாசில்தார் அலுவலகம் வரை அரசு அலுவலகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் கிளைச் சிறையில் உள்ள விசாரணைக் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிளைச் சிறையை ஒட்டியிருந்த தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டது. தற்போது உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோட்டாட்சியர் அலுவலகம், அதே வளாகத்தில் செயல்பட்டு வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம், பி.எஸ்.என்.எல் அலுவலகங்கள் மூடப்பட்டன. இந்தப் பகுதி கொரோனா தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது