×

இனி ஹெல்மெட் அணியாமல் போலீசார் வாகனம் ஓட்டினால் ஒரு நாள் ஆப்சென்ட் : மண்டல ஐ.ஜி-க்கள் அதிரடி உத்தரவு!

 

பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து தான், இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. சில நேரங்களில், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே, அதனை மீறி வருகின்றனர். 'ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனங்களில் போலீசார் சென்றால், பொதுமக்கள் அதை, 'வீடியோ' எடுத்து, சமூக வலை தளங்களில் வெளியிடுகின்றனர். இது, காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது.

இதனை தவிர்க்கவும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும், 'ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் போலீசாருக்கு, ஒரு நாள், 'ஆப்சென்ட்' போட வேண்டும்' என, மாவட்ட எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மண்டல ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:போலீசார், 'ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது தெரிய வந்தால், அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர், ஐ.எஸ்.ஐ., முத்திரையுடன் கூடிய, புதிய ஹெல்மெட் வாங்கி வந்த பின், அவரிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும்.

போலீசார் காலை, 7:00 மணிக்கு பணிக்கு வரும் போது, 'ஹெல்மெட்' அணிந்து வந்ததை, உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தது தெரிய வந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாள், 'ஆப்சென்ட்' போட வேண்டும்.சாலையில், போலீசார் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.