20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்- Acer, Dell, Hp ஒப்பந்த புள்ளிகள் சமர்பிப்பு
தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்குவதற்கான திட்டத்திற்கு 3 நிறுவனங்கள் டெண்டர் சமர்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியிருந்தது.
இதன்படி 8 ஜிபி ரேம் (டிடிஆர்-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (எஸ்எஸ்டி), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது ஏஎம்டி பிராசசர், புளூடூத் 5.0, விண்டோஸ் 11 ஓஎஸ், 720பி ஹெச்டி கேமரா, ஒரு வருட உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களுடன் ‘தமிழக அரசு மடிக்கணினி’ என்ற வாசகமும் இதில் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெண்டர் இன்று திறக்கப்பட்ட நிலையில், Acer, Dell, HP நிறுவனங்கள் டெண்டரை சமர்பித்துள்ளன. இதன்பிறகு தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி ( technical bid) ஆய்வு செய்யப்படும். தொழில்நுட்ப ஒப்பந்த புள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் நிறுவனங்களிடமிருந்து விலை தொடர்பான ஒப்பந்த புள்ளி ( price bid) பெறப்படும். இதன் பிறகு ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு கொள்முதல் ஆணை வழங்கப்படும். அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் கொள்முதல் செய்வதற்கான ஆணைகளை நிறுவனங்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.