×

மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்; ராகுல் பிரதமராவார்- நாராயணசாமி

 

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து புதுச்சேரி காங்கிரசார் அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்து  கொண்டாடினார்கள். மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் பேரணியாக புறப்பட்டு காமராஜர் சிலை முன்பு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ராகுல் காந்தி வாழ்க சோனியா வாழ்க என கோஷமிட்டபடி வெற்றியை மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கொண்டாட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மத சார்பற்ற கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம். ஆனால் பாஜகவின் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் பண பலத்தால் அந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு அவர்கள் வந்தார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த ஒரு நலத்திட்டங்களும் செய்யவில்லை. வேலை இல்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மகளிருக்கான அணி திட்டங்கள் செயல்படுத்தவில்லை, இதற்கெல்லாம் தற்போது கர்நாடக மக்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

கர்நாடக தேர்தல் என்பது அடுத்து மத்திய பிரதேசம் ராஜஸ்தான் சண்டிகரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம். கர்நாடகாவில் 20 பொதுக்கூட்டங்களில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். கட்சியின் தலைவர் ஜே. பி. நட்டா, அமித்ஷா பேசினார்கள். இருக்கிற பாஜக அமைச்சர்கள், பிரமுகர்கள் எல்லாம் பேசினார்கள். இருந்தாலும் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து வாக்களித்து இருக்கிறார்கள். 

இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் பிரச்சாரம் செய்துள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும், அப்போது ராகுல் காந்தி பிரதமராக ஆவார். கர்நாடக தேர்தல் வெற்றி என்பது பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி. நட்டா மற்றும் அமிஷாவுக்கு ஒரு மரண அடி” என்று குறிப்பிட்டார்.