×

வடமாநிலத்தவர் பிரச்சனைக்கு சீமான் தான் காரணம்- கே.எஸ் அழகிரி

 

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவது சீமான் மற்றும் பிஜேபி தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி பவனில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவெகி.சம்பத்தின் 98-வது பிறந்தநாளையொட்டி அவரது  திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.அழகிரி, “ஈவெகி.சம்பத்தின் பேச்சாற்றல் மற்றும் உழைப்பிற்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பது எனது கருத்து.  கல்லூரி காலத்தில் அவர் பேச்சைக் கேட்பதற்காக அலைந்து திரிந்து இருக்கிறேன். அவர் அழுத்தம் திருத்தமாகவும் எந்த இடத்தில் எதை பேச வேண்டும் என்ற பேச்சாற்றலையும் உடையவர். அவரைப் போல பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். இன்றைக்கு ஓரளவுக்கு நான் பேசுவதற்கு காரணம் என்னுடைய குருநாதர் சம்பத் அவர்கள் தான்.

வட மாநில தொழிலாளர்கள் குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக பிஜேபி, ஆர்எஸ்எஸ்  மறைமுகமாக செய்கிறார்கள். சீமான் வெளிப்படையாக செய்கிறார்கள், இவர்கள் இரண்டு பேர்தான் காரணம். சீமான் தன்னுடைய விளம்பரத்திற்காக தமிழக மக்களுக்கும் வட இந்தியர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார். வேண்டும் என்றே திட்டமிட்டு இது போன்று செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு மாநிலம், ஜாதி, மொழி கிடையாது. அவர்களுக்கு கை உண்டு, கால் உண்டு, வயிறு உண்டு. ஒருவேளை சோற்றுக்காக இங்கே உழைக்க வருகிறார்கள். சீமான் பேச்சு அவருக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது.

சிங்கப்பூர் போன்ற இடங்களில் நம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எதிராக எதாவது நடந்தால், நாம் சும்மா இருப்போமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னதுதான் தமிழ் மரபு. எனவே தமிழக அரசு உடனடியாக அம்பு எய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு 10 ஆண்டுகளாக சீமான் தான் காரணம். ரயில்வே மற்றும் வங்கியில் பணி செய்பவர்கள் வேறு, தொழிலாளர்கள் வேறு” என்றார்.