"தினமலரைத் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்" - ஜவாஹிருல்லா
காலை உணவுத் திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமலருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தனது இணையதள பக்கத்தில், தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்கிறார் திருவள்ளுவர்.
ஒருவர் தினையளவு உதவி செய்திருந்தாலும், அந்த உதவியின் பயன் அறிந்தவர்கள், அந்த உதவியைப் பனையளவுக்கு உயர்த்திப் பார்ப்பார்கள். ஆனால் தினமலரிடம் இந்தஉயரிய பண்பாடோ கோட்பாடோ இல்லை என்பதை அம்பலப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து அது இன்று வெளியிட்டுள்ள அநாகரீக செய்தி அம்பலப்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ மாணவிகளுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்த தினமலரின் கீழ்த்தரமான செய்தி கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தின் மற்றைய ஏடுகள் அனைத்தும் இத்திட்டத்தைப் பாராட்டி எழுதிக் குவித்துள்ளன.
காலை உணவை உண்டு உடல் திறனுடன் கல்வியை கற்கும் மாணவர்களின் புன்னகைபூக்கும் முகங்கள் தினமலருக்கு மட்டும் வெறுப்பாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கருத்துகளைப் பரப்பும் தினமலரைத் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தினமலருக்கு கடும் கண்டனத்தைப் பதிவுசெய்கிறோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.