×

சி.எம்.சார்... இதை மட்டும் நீங்க கரெக்ட் சொல்லிட்டா சேகர்பாபு 10 லட்சம் தருவார் - திண்டுக்கல் ஐ.லியோனி சவால்..!  

 

திமுகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திண்டுகல் ஐ.லியோனி பேசுகையில், “முதலமைச்சருக்கும் அமைச்சர் யார் என்று தெரியவில்லை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்று தெரியவில்லை. அமைச்சர்களுக்கு எந்தத் துறை அமைச்சர்கள் என இன்று வரை அவர்களுக்கு தெரியவில்லை என்று விமர்சித்தார். மேலும், தனது அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சர் விஜய் மட்டும் தப்பில்லாமல் வரிசையாகக் கூறிவிட்டால், அவருக்கு எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சொந்தப் காசில் இருந்து ரூ.10 லட்சம் பம்பர் பரிசு வழங்குவார் என்றும் சவால் விடுத்துள்ளார்.


திமுகவினர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதற்காக நடந்து வரும் நிகழ்ச்சிகளில் திமுகவை சார்ந்த பிரமுகர்கள் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள தவெகவை கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் ஐ லியோனி, கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் தவெகவையும், விஜய்யையும் கிண்டலடித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் கடந்தாண்டு இதே ஜுன் 12 ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் இப்போதுள்ள முதல்வர் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா? கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் துண்டை பொத்தி சாமி கும்பிட்டு கொண்டு இருக்கிறார். மேட்டூர் அணைக்காக விவாசாயிகள் தலையில் துண்டை போட்டு காத்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் மூகாம்பிகை கோவிலுக்கு போனார். அதுனால நானும் போவேன் என்று போயுள்ளார்.

இதே மாதிரி நிறைய பேர் பாலோ பண்ணி வீணாக போயுள்ளார்கள். மூகாம்பிகை கோவிலுக்கு போனால் எம்ஜிஆர் ஆகி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு கொண்டிருக்கும் இன்றைய முதல்வர் ஜோசப் விஜய்க்கு சொல்கிறேன். ஜோதிடத்தை நம்பி இந்த ஆட்சியில் நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். இதே ஜோதிடத்தால் நீங்கள் வீணாய் போவீர்கள் என்பதை எச்சரிக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதோடு இதுவரைக்கும் அவர் தலையில் கருப்பு பொட்டு வைத்து பார்த்து இருக்கீங்களா? இப்போ ஜோசியக்காரர் சொல்லி இருக்கிறார். கையில் சிவப்பு கயிறு. இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் உங்களுடைய அமைச்சர் பெயரை எல்லாம் வரிசையாக சொல்லுங்க ஐயா. எங்கள் அண்ணன் சேகர் பாபு , உங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுப்பார் என சவால் விடுத்துள்ளார்.அவருடைய இந்த பேச்சு தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.