நாங்கள் பிடிவாதமாக இல்லை, தெளிவாக இருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்த அளவில் கல்வித்தரத்தில் பிற மாநிலத்தவருக்குக் குறைவாக இருக்கிறார்கள்? என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, தன்னுடைய மொழிக்கொள்கையில் தெளிவாக இருக்கிறது. ஒன்றியத்தில் இதற்கு முன் இருந்த பல ஆட்சியாளர்கள் இந்தித் திணிப்பு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போதும் தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து நின்றது. அப்போதெல்லாம், இந்தியை நுழையச் செய்யும் திட்டங்கள்தான் நிறுத்தப்பட்டனவே தவிர, தமிழ்நாட்டின் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியை நிறுத்தவில்லை. பா.ஜ.க. அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது. 'இந்தி திவஸ்' கொண்டாடப்படும் போதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு, இந்தியா முழுவதும் இந்தியை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பா.ஜ.க.வினரும் தெரிவிக்கிறார்கள். இதன் உள்நோக்கத்தைத் தமிழ்நாடு உணர்ந்திருப்பதால்தான், எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை. மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் உடன்பிறப்புகளுடன், உங்களில் ஒருவனான நான் முதல் ஆளாக நிற்பேன்.
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்! என குறிப்பிட்டுள்ளார்.