×

 ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  கடிதம்!!

 

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையான ஒன்றாக மாற்றிவிட்டது. அந்த வகையில் வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படைகள்  கைது செய்துள்ளன.  அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்ட  செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, கடந்த 6-9-2022 அன்று புதுச்சேரியைச் சேர்ந்த விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.