×

போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு... சாதனை ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

 

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். பொங்கல் திருநாளையொட்டி, மேற்கூறியவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

2021ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85 வீதமும் 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 வீதமும் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வீதமும் பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 பேருக்கு 7 கோடியே 1 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.