×

அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தலைமைச் செயலக ஊழியர் சங்கம்

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி அறிவித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும்   அகவிலைப்படி 38 சதவீதத்தை  42 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும் என்று உறுதிபட கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.