×

லண்டனில் திடீரென ரத்தான முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சி..!!

 

லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார்.

இதனை அறிந்த விஜய்யின் ரசிகர்கள், அவரை சந்திப்பதற்காக அந்த ஓட்டல் எதிரே உள்ள வீதிகளில் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். அத்துடன் TVK TVK என பெரும் கூச்சலுடன் முழக்கங்களையும் எழுப்பினர். விஜய் தங்கியிருக்கும் ஓட்டல் அருகே லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலையம், முக்கியமான மருத்துவமனை அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்கு விஜய் ஆதரவாளர்கள் இடையூறாக இருந்ததாக கூறி அவர்கள் அனைவரையும் கலைந்து செல்லுமாறு லண்டன் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தினர்.

ஒரு கட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய்யுடன் சென்ற பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜ் ஐபிஎஸ்-ம் லண்டன் போலீசாருடன் இணைந்து மைக் மூலமாக , “அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக தவெக தரப்பில், ”தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைக் காண்பதற்கு, லண்டன் மாநகர தமிழ் உறவுகள் உள்ளம் நிறைந்த அன்போடும் உணர்வோடும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டும், லண்டன் மாநகரக் காவல்துறையின் வேண்டுகோளை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் உங்களைப் பார்க்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அவரைக் காண்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறோம்

மேலும் வெற்றித் தலைவர் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் வாசலில் காத்திருப்பது, அவர் செல்லும் வழியில் காத்திருப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

.