எய்ம்ஸ், தரமான சாலை, 'அனைவருக்கும் வீடு'.... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கோரிக்கை
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்பட எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. நீட் தேர்வுக்கு பதிலாக ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தர வேண்டும், எந்தவித நிபந்தைனையும் இன்றி ரூ.3284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழும் தமிழ்நாடு, தனது உறுதித்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது. பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களானது சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாக திகழ்கின்றன.
இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்யும் பெண்களில் 42% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையாக கோவை மாவட்டத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதே தமிழ்நாட்டின் இலக்கு. செயற்கை நுண்ணறிவு (AI), ஆழ்தொழில்நுட்பம் (Deep Tech), சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், இவி தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மையங்கள் அமைக்க ஒன்றிய அரசின் ஆதரவு தேவை. எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை அடையாளம் கண்டு, நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய புதிய இயக்கம் முன்மொழியப்பட்டுள்ளது. 'அனைவருக்கும் வீடு' திட்டத்திற்கு ஒன்றிய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்புப் பிரிவுகள், அவசரகால நடவடிக்கை அமைப்புகள், CCTV வலைப்பின்னல்கள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். தொழில்நுட்பம் சார்ந்த அதிரடி காவல் பணிகளுக்காக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" தொடங்கப்பட்டுள்ளது . பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கத் தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 1,076 கி.மீ கடற்கரைப் பகுதியைத் தற்காக்க, "காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045" (Climate Resilient Master Plan 2045) திட்டத்திற்கு ஒன்றிய அரசின் ஆதரவு தேவை. குலசேகரபட்டினத்தில் அமையவுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை "தேசிய விண்வெளி உற்பத்தி மையம்" ஆக அறிவிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரை 6 வழிச்சாலையாக்குதல். NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) - ஜீயபுரம் - கரூர் பகுதியை 6 வழிச்சாலையாக்குதல். NH-81 கரூர் - கோயம்புத்தூர் பகுதியை 6 வழிச்சாலையாக்குதல். NH-87 மாதவரம் - சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் (Elevated Corridor) அமைத்தல். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் (High Speed Rail Corridor) அமைக்க வேண்டும். ஒகேனக்கல் 3-ஆம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி ஒன்றிய நிதி உதவி வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.