ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- ஈரோட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரத்து 491 கோடி ரூபாய்க்கு 68 இலட்சத்து 85 ஆயிரத்து 232 பேருக்கு நலத்திட்ட உதவிகளும், 3 ஆயிரத்து 836 கோடி ரூபாயில், 19 ஆயிரத்து 488 வளர்ச்சி திட்டப்பணிகளும், 9 ஆயிரத்து 327 கோடி ரூபாய்க்கு செய்திருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருக்க முடியுமா! வெளியிடாமல் சென்றால் இங்கே இருப்பவர்கள் என்னை சும்மா விட்டுவிடுவார்களா! எனவே, இந்த ஈரோடு மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புகளை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.
1) முதல் அறிவிப்பு:
புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு, 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவிலும், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு, 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும் புதிய நகராட்சி அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.
2) 2-வது அறிவிப்பு:
பவானிசாகர் மற்றும் கீழ்பவானி நீர்ப்பாசனத் திட்டங்களின்கீழ், திட்ட நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை, நிரந்தர பட்டாவாக மாற்ற வேண்டும் என்ற சத்தியமங்கலம், நம்பியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைய ஏற்று, இந்த 90 கிராமங்களில் உள்ள, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பட்டாக்கள், நிரந்தரப் பட்டாவாக மாற்றப்படும்.
3) 3-வது அறிவிப்பு:
அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை அமைக்கப்படும்!
4) 4-வது அறிவிப்பு:
சாயப்பட்டறைக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து ஆராய, வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.
5) 5-வது அறிவிப்பு:
பெருந்துறையில் தற்போதுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.
6) 6-வது அறிவிப்பு:
அந்தியூர் மற்றும் எண்ணமங்கலம் வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கான பதிவேடுகளில் உள்ள நிபந்தனை பட்டாக்கள் அயன் பட்டாக்களாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.