நெல் மூட்டை சரிந்து உயிரிழந்த பெண்- முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திபட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை சரிந்து உயிரிழந்த சின்னபொண்ணு (55) குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 06.07.2026 அன்று காலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளுக்கு அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் மீது நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் திருமதி சின்னபொண்ணு (வயது 55), க/பெ. (லேட்) காசிநாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன். மேலும், இவ்விபத்தில் இலேசான காயம் அடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமதி சகுந்தலா (வயது 25), க/பெ.முருகானந்தம் என்பவருக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு மூன்று எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.