வெட்டும் பெருமாளை குத்திக்கொலை செய்த சேர்மதுரை கைது
கூட பிறந்த தம்பியையே கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்து பிரச்சனையால் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி யில் நடந்து உள்ளது இந்த சம்பவம்.
சேரன்மகாதேவி அடுத்த பிள்ளைகுளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் வெட்டும் பெருமாள், சேர்மதுரை. இந்த சகோதரர்களின் தந்தை ஏராளமான மாடுகள் வளர்த்து வந்த நிலையில் தந்தையின் மறைவுக்குப் பின்னர் மாடுகளை, வெட்டும் பெருமாள் பராமரித்து வருகிறார்.
மாடுகளை வெட்டும் பெருமாள் பராமரித்து வரும் நிலையில், இந்த மாடுகளை பங்கு கேட்டு இரண்டு குடும்பத்தினருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வந்திருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டபோது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதியன்று வெட்டும் பெருமாள் மாடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது சேர்மதுரையிடம் வாய்த்தகராறு ஏற்பட்டு இருக்கிறது . தகராறு முற்றியதும் வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து சேர்மதுரையையும் அவரது மனைவி இசக்கியம்மாள் , மகன் சிவராம சதீஷ் ஆகியோரை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சேர்மதுரை பதிலுக்கு கத்தியை எடுத்து வெட்டும் பெருமாளை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த வெட்டும் பெருமாளை சேரன்மகாதேவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் வெட்டும் பெருமாள் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து வெட்டும் பெருமாளின் மனைவி தீபா சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சேரன் மகாதேவி போலீசார் சேர்ம துரையை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சொத்து பிரச்சினையால் சொந்த தம்பியை கொலை செய்த சம்பவம் சேரன்மகாதேவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.