“சென்னையை சுற்றிப்பார்க்க போலாம்..”- ரூ.50ல் விண்டேஜ் பேருந்தில் நாள் முழுவதும் உலா
சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக 'சென்னை உலா" பேருந்தினை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து “சென்னை உலா” பாரம்பரியப் பெருமை மாறாத வின்டேஜ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். சென்னை பெருநகரில் பழமை மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கண்டுகளிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக “சென்னை உலா” பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களான சென்ட்ரல் ரயில் நிலையம்,மெரினா,விவேகானந்தர் இல்லம், மைலாப்பூர் லஸ் கார்னர், அண்ணா மேம்பாலம், எழும்பூர் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட 17 இடங்களில் சென்னை உலா பேருந்துகள் வாரம் முழுவதும் மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரைக்கும் வார இறுதி நாட்களில் காலை 10 முதல் இரவு 10 மணி வரையும் இயக்க திட்டமிட்டுள்ளனர் இதற்கான டிக்கெட் விலை ரூ50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து பேருந்து துவக்கி வைத்து பேருந்தில் தலைமைச் செயலகம் வரை பயணம் செய்தார். பேருந்தில் சென்னை மாநகரின் புராதான சின்னங்கள் மற்றும் முக்கிய இடங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நிறுத்தங்கள் வருவதற்கு முன்பாக அந்த வரலாறுகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், 20-25 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த பேருந்துகளைப் போல் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம் தொடங்கி எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், கடற்கரை சாலைகளை வந்தடைந்து அந்த சுற்றுவட்ட பாதையில் இயக்கப்பட உள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்பட உள்ளது. 50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் குறிப்பிடப்பட்ட நிறுத்தங்களில் சுற்றி பார்க்கலாம். சென்னை மாநகராட்சியின் தொன்மையை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நினைவுச் சின்னங்களின் பெருமைகளை விளக்கும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புகள் செய்யப்பட உள்ளது” என தெரிவித்தார்.