×

ஓபிஎஸ் ரூ.82 கோடி செலுத்தக்கூறி ஐ.டி. அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

 

முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 82 கோடியே 32 லட்சம் ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 2015 - 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும்,   2017 - 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நோட்டீஸ் மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு,  வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டட்க்ய், மேலும்,  மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறை உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்