×

தேசியக்கொடி, சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கவும் : காவல்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு...

 

தேசியக்கொடி, சின்னங்கள் மற்றும் முத்திரைகளை  தவறாக பயன்படுத்துபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

 தேசிய சின்னங்கள் மற்றும் அரசின் அடையாளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக  கடந்த 2014 ஆம் ஆண்டு சினிமா ஃபைனான்சியர் முகுந்தன்  கோத்ரா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை  தடுக்க காவல் துறையினர் எந்த சட்ட நடவடிக்கைகளையும் பின்பற்றுவத்தில்லை  என்று குறிப்பிட்டிருந்தார்.  ஃபைனான்சியர் முகுந்தனின் மறைவிற்கு பிறகு இந்த வழக்கை அவரது மகன் நடத்தி வந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நிதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி,  முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அரசின் சின்னங்கள், கொடிகள் மற்றும் முத்திரைகளை தவறாக  பயன்படுத்தக் கூடாது என்றும், இதுபோன்ற செயல்களின் மூலம், அவர்கள் குற்ற சம்பவங்களில் இருந்து  தப்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.  வாகனங்களில் இதுபோன்ற சின்னங்கள் இருக்கும்போது காவல் துறையினர் நடவடிக்கை  எடுப்பதில்லை என்றும் நீதிபதி தன்னுடைய அதிருப்தியை  தெரிவித்தார்.

முறையான அனுமதி இல்லாமலோ அல்லது தவறாகவோ  இதுபோன்று   சின்னங்கள் பயன்படுத்துவதைப்  பார்த்தால், காவல் துறையினர்  தாமாகவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டம் உள்ளது. எனவே காவல்  துறையினர்  சின்னங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தெரிவித்த்துள்ளார்.  தேசியக்கொடி தவறாக பயன்படுத்தப்பட்டு இருந்தால் அதனை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும்,  விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தமிழக பொதுத்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஜனவரி 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..