"முடிவுக்கு வராத பிரச்சனை”- வடகலை, தென்கலை பிரிவினர் மோதல் குறித்து ஐகோர்ட் கருத்து
வைணவ சமயத்தில் தென்கலை, வடகலை பிரச்சனை தீராத பிரச்னையாக இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் உள்ள குலசேகரப்படியில் பொருத்துவதற்காக விஸ்வநாத் என்பவர் வெள்ளிக்கவசத்தை தானமாக வழங்கினார். சங்கு சக்கரத்திற்கு நடுவில் ஆதிசேஷனுடன் பொறிக்கப்பட்டிருந்த இந்த கவசத்தின் நடுவில் வடகலை நாமத்தை பொறிக்க உத்தரவிட வேண்டும் என வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சபை சார்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்து அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய சபை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்க அறநிலையத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. இதில் தலையிட முடியாது எனவும், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாடவேண்டும் எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வைணவ சமயத்தில் வடகலை தென்கலை பிரச்சினை கவனமுடன் கையாள வேண்டிய தீவிரமான பிரச்சினையாக முற்றுப் பெறாமல் நீடிக்கும் பிரச்சினையாக இருக்கிறது எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்