×

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.  

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாங்கள் முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும், பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை. தன்னை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பான அஜெண்டா பொதுக்குழுவில் இல்லை என வாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.