×

அதிமுக உட்கட்சி வழக்கில் நடந்த வாதம் என்ன? - முழு விவரம் இதோ!

 

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனிடையே வழக்கில் வைக்கப்பட்ட வாதங்கள் வெளியாகியுள்ளன. புதிய தலைமை தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை. கட்சியில் எந்த பிளவும் இல்லை. எனக்கான ஆதரவு அப்படியே நீடிக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு இழப்பு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன் வைத்தது. ரவீந்திரநாத் தரப்பு வைத்த வாதத்தில், பெரும்பாலானோர் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கூடாது. தங்கள் மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் முன்னைரே தேர்தல் ஆணைய விசாரணையை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.