×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியம் - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.. 

 


 விற்பனை முகவர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், அதற்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்  சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியாக இம்மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் விற்பனைமுகவர் திட்டத்தின் மூலம் வருவாய் ஈட்டிட ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமென்ட் விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார்கள். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு சிமென்ட்கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதுக்குள்ளாக இருக்கவேண்டும். ஆதிதிராவிட இனத்தைசேர்ந்தவர்களுக்கு திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லதுஅதிகபட்சம் ரூ. 3.75 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் இணைய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும்விவரங்களுக்கு சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்தின் 2-ம்தளத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம். 044-25246344 என்ற தொலைபேசியிலும் தொடர்புகொள்ளலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.