×

சென்னை மாநகராட்சியின் சூப்பர் ஐடியா..!!

 

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் வெப்பம் மிக அதிகமாக காணப்படுகிறது.

சென்னை மாநகரில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு சிக்னல்களில் நின்று செல்லும்போதும் அங்கு நிழல் இல்லாத காரணத்தால் சூட்டில் தவிப்பது தொடர்கதையாகி வருகிறது.

எனவே போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள சிக்னல்களில் கடந்த 2024ஆம் அண்டு முதல் பசுமை பந்தல்கள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி, பச்சை நிற பசுமை துணியினாலான பந்தலானது சென்னை முழுவதிலும் உள்ள பல்வேறு முக்கிய டிராபிக் சிக்னல்களில் அமைக்கப்பட்டது.

இந்த பந்தலானது சிக்னல்களில் நிற்கும் சமயங்களில் வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்திலிருத்து காத்து வருகிறது.

கடந்த ஆண்டு சென்னையில் 8 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு சென்னை முழுவதிலும் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வரும் மே 4ஆம் தேதி தமிழ்நாட்டில் கத்திரி வெயிலில் தாக்கம் துவங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பாக பசுமை பந்தல்களை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.