ரசாயன வாயு தாக்கி 3 பேர் மயக்கம்! வாணியம்பாடியில் பரபரப்பு
வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் இராசயன வாயு தாக்கி 3 பேர் மயக்கமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் 100 க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கிளாசிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இராசாயன பொருட்களை எடுக்கும் போது ரசாயனத்தில் இருந்து வெளியான வாய்வு தாக்கி சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த தொழிற்சாலை காவலாளி நாகராஜ், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆப்பரேட்டர் பெருமாள், சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த மேற்பார்வையாளர் முனீர் ஆகிய 3 பேர் மயங்கி விழுந்தனர்.
இதனை கண்டு அதிரிச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் 3 பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாகராஜ் மயக்கமான நிலையில் உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.