×

உள்ளாட்சி தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மாற்றம்!!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பி.இ, பி.டெக் மற்றும் பி.ஆர்க் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.  அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவித்தது. இந்த சூழலில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  வருகிற 19ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததுடன், அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்  பிப்ரவரி 19-ஆம் தேதி இருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளில்  நடைபெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தேதி மாற்றம் செய்து அறிவித்துள்ளது.அதன்படி தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அட்டவணையில்,  பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருந்த இளநிலை,  முதுநிலை படிப்பு தேர்வுகள் மார்ச் 5 ,6 ,9 ,11-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.