×

 "மத்திய அரசு அறிவிப்பை உடனே  தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும்" - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி 

 

இனிவரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி  தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.  தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ,ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வால்  தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு 2366.82 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழக அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்